வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காட்டூர் அரசு மேனிலைபள்ளி – வரலாறு



காட்டூர் அரசு மேனிலைபள்ளி – வரலாறு


மு.சிவகுருநாதன்





   01.09.2017 அன்று நடைபெறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட விவர அறிக்கை.


    திருவாரூர் மாவட்டம் காட்டூர் திருவாரூர் – கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பவித்திரமணிக்கத்திற்கு  அடுத்துள்ள சிற்றூர். ஊர் என்ற பின்னொட்டாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவெங்கும் உள்ளன. (பார்க்க: சிந்துவெளி இடப்பெயர் ஆய்வுகள், ஆர். பாலகிருஷ்ணன்)


     திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டத்திலுள்ள காட்டூர்களை ஒப்பிடும்போது திருவாரூர் காட்டூர் மிகச்சிறிய கிராமம். காவிரியின் கிளையாறுகளான வெட்டாறு (வடக்கு), ஓடம்போக்கியாறு (தெற்கு) ஆகிய இரண்டு ஆறுகளுக்குட்பட்ட வளமான வண்டல் மண் பூமியே இவ்வூராகும். சிற்றூராட்சியான காட்டூர் விளாகம், காட்டூர் என்ற இரு கிராமங்களைக் கொண்டது.






   காடுகளைக் கொண்ட பகுதியாக இருந்ததனால் இப்பெயர் பெற்றிருக்கக் கூடும். பொதுவாக ஊர்ப்பெயர்கள் பல்வேறு காலகட்டங்களில் அன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு மாற்றம் பெற்றுள்ளன. (எ.கா. திருமரைக்காடு – திருமறைக்காடு – வேதாரண்யம், மரை – மான்) அதற்கான காரணங்கள் பல உள்ளன. இதுதான் என்று அறுதியிட்டு கூறுவது இயலாது.


     திருவாரூர் – கும்பகோணம் சாலைக்கு இணையாக உள்ள முதலியார் தெரு  கிராமச்சாலையின் வடக்கு, தெற்கு என இருபுறமும் அரசு மேனிலைப் பள்ளி அமைந்துள்ளது.  நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமுடைய இவ்வூர் இன்று பெரும்பாலும் அடித்தட்டு மற்றும்  நகரை ஓட்டிய அரை நகர (semi – urban) வாழ்விடமாக மாறியுள்ளது.


   முன்னாள் கல்வியமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலாளர் பேரா. க.அன்பழகன் பிறந்த ஊர் இதுவாகும். முன்னாள் தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்திற்கு அருகேதான் இப்பள்ளி அமைந்துள்ளது. இவை இப்பள்ளி உயர்நிலை, மேனிலை என தரம் உயர்த்தப்பட்டு வளர்ச்சி பெற்றதற்கான காரணமாகும். பள்ளிக்குத் தேவையான பல்வேறு உதவிகளை தி.மு.க. வைச் சார்ந்தவர்களாலும் மற்றும் அமைப்புகளாலும்  செய்யப்பட்டுள்ளன. இவ்வூரைப் பொருத்த அளவில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சி வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். விடுதலை நாள், குடியரசு நாள் விழாக்களில் காட்டூர், அகரத்திருநல்லூர் கிராமத் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கலந்துகொள்வது இதற்குச் சான்றாகும்.


     21.11.1928 இல் தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டுப் பின்னர் நடுநிலைப்பள்ளியாகி (நாள் தெரியவில்லை.) 27.07.1998 லிருந்து உயர்நிலைப் பள்ளியாகவும் 16.06.2008 லிருந்து மேனிலைப் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.


     காட்டூர் ஐவர் அவை நிர்வாகத் தொடக்கப்பள்ளி என அழைக்கப்பட்ட இப்பள்ளிக்கு 12.02.1956 இல் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் அப்போதைய சென்னை மாநில பொதுக் கல்விதுறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான கல்வெட்டு காணக்கிடைக்கிறது. அப்போது திரு கே.வி.இராமையா ஊர் ஆட்சிமன்றத் தலைவராக இருந்துள்ளார்.


     கட்டிட நிதிக்குழுத் தலைவராக முன்னாள் முதல்வர் திரு மு. கருணநிதி அவர்கள் இருந்துள்ளார். நாடகம் இயற்றி, இயக்கி, நடித்து அதன் மூலம் இக்கட்டிடத்திற்கான தொகையைத் திரட்டியதாகச் சொல்கிறார்கள். இக்கட்டிடத்தை 07.07.1957 இல் முன்னாள் தமிழக முதல்வர் திரு சி.என்.அண்ணாதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது இருவரும் சட்டமன்ற உறுப்பினர்கள். அப்போது திரு கு.காமராஜ் அவர்கள் தமிழக முதல்வர்.


   உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பலரிடம் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றிற்காக கல்வெட்டுகள் உள்ளன. (அவற்றைக் காண படங்களைப் பார்க்க.) படிப்படியாக வளர்ந்து இன்று புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது. புதிய கட்டிடம் கட்ட இடமில்லாத நிலையில் இக்கட்டிடம் மற்றும் அருகிலுள்ள பழைய கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை ஏலமிட்டு இடிக்க முனைந்தபோது கிராம மக்கள் இதன் தொன்மையைக் கூறி இக்கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும், மாறாக இடிக்கக் கூடாது என்று கோரிக்கைகள் வைத்ததால் இடிப்பது தடுக்கப்பட்டது.


(தொடரும்)  

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பிற்காலச் சோழர்கள்

பிற்காலச்  சோழர்கள்




 
.மு.சிவகுருநாதன்
 
 
 
  1.  விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) 
  2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 – கி.பி. 907)
  3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – கி.பி. 953)
  4.  கண்டராதித்த சோழன் (கி.பி. 950 – கி.பி. 957)
  5.  அரிஞ்சய சோழன் (கி.பி. 956 – கி.பி. 957)
  6.  இரண்டாம் பராந்தக சோழன் (கி.பி. 957 – கி.பி. 970)
  7.  உத்தம சோழன் (கி.பி. 970 – கி.பி. 985)
  8.  முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014)
  9.  முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 – கி.பி. 1044)
  10.  முதலாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 – கி.பி. 1054)
  11.  இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 – கி.பி. 1063)
  12.  வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1063 – கி.பி. 1070)
  13.  அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070)
  14.  முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120)
  15.  விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136)
  16.  இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 – கி.பி. 1150)
  17.  இரண்டாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 – கி.பி. 1163)
  18.  இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 – கி.பி. 1178)
  19.  மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218)
  20.  மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 – கி.பி. 1256)
  21.  மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279) 
 
 
 
சில குறிப்புகள்:
 
 
      பல அரசர்களுக்கு அவர்கள் இளவரசுப் பட்டம் ஆண்டிலிருந்து காலகட்டம் குறிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்க.
 
 
    ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘தென்னக அரசுகள்’ என்னும் பாடத்தில் 18 மன்னர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். அதில் ஆதித்தன் (ஆதித்த கரிகாற் சோழன்) (கி.பி. 956 – கி.பி. 966) என்று உள்ளது. இரண்டாம் பராந்தக சோழனின் (கி.பி. 957 – கி.பி. 970) மகனான ஆதித்த கரிகாலன் (கி.பி. 966 – கி.பி. 969) கி.பி. 966 இல் இளவரசு பட்டமேற்று மூன்றாண்டுகளில் கி.பி. 969 இல் படுகொலை செய்யப்பட்டவன். எனவே இவரை அரசர் பட்டியலில் கொள்வது தவறன்றோ!
 
    
       இந்தப் பட்டியலில் முதல் 13 அரசர்கள் விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) முதல் அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070) ஈறாக 13 பேர்,ஆண் வழிச் சமூக அமைப்பில் விஜயாலய சோழன் மரபாகச் சொல்லப்படுகின்றனர்.
 
     முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1012 – கி.பி. 1044) மகள் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன். இவனும் இவனுக்குப் பின்னால் வரும் 8 அரசர்கள் கீழை சாளுக்கிய மரபினர் ஆவர்.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நாளிதழ்கள் வாசிப்பு

நாளிதழ்கள் வாசிப்பு


          பள்ளி நூலகத்திலுள்ள  நூல்கள் பெரும்பாலும் மாணவர்கள் வாசிக்க உகந்ததாக இல்லை.  குழந்தை இலக்கிய நூல்கள் அறவே இல்லை. குழந்தை இலக்கியத்துடன் அறிவியல், சூழலியல் போன்ற இன்றையமையாத நூல்களும் வேண்டும்.


      இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு குழந்தைகள் என்றால் வெறும் நீதிக்கதைகளை மட்டும் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நூல்களை வாங்கிக் குவிக்கும் நிலை மாற வேண்டும்.
 
    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) மூலம் ஆண்டுதோறும் வாங்கும் நூல்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.


      மேலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் நாளிதழ்கள் வாசிப்பில் ஆர்வம் உண்டாகவும் 'தி இந்து' தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களான  மாயாபஜார், நலம் வாழ, பெண்கள் இன்று, வெற்றிக்கொடி , வணிகவீதி  போன்றவற்றில் அவர்களுக்கு விருப்பமான  பகுதிகளை அவர்களேத் தேர்வு செய்து வாசிக்க சொன்னோம்.
 
      மதிப்புக்கல்விப் (VE) பாடவேளையில் 7 மற்றும்  9 ஆம் வகுப்பு மாணவர்கள் வாசித்த நிகழ்வின் காட்சிப்படங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.












எழுத்து வடிவம்:


மு.சிவகுருநாதன்
  

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நாளிதழ்களில் தொன்மை சார்ந்த வரலாற்றுச் செய்திகள்


நாளிதழ்களில் தொன்மை சார்ந்த வரலாற்றுச் செய்திகள்



    ஆகஸ்ட் 18, 2017 (18.08.2017) அன்று மாலை 4.30 மணிக்கு எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கூடியது. மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் செயல்பாடு உதாரணத்துடன் செய்து காட்டப்பட்டது.






      இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்பார்கள். நாளிதழ்களையும் நல்ல நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இனிமையானது. அவற்றைக் கைக்கொள்ளவேண்டும்.










   நாளிதழ்களில் அன்றாடம் வெளிவரும் செய்திகளில் பழங்கால வரலாறு  மற்றும் தொன்மை பற்றிய செய்திகள் நிரம்ப உண்டு. அவற்றைச் சேகரித்து, வெட்டி ஒட்டி ஆல்பம் அல்லது  துணுக்குப் புத்தகம் தயாரிக்கும் செயல்பாடு இன்றைய கூட்டத்தில வழங்கப்பட்டது. சில செய்தித் துணுக்குகளில் மாதிரிகள் காண்பிக்கப்பட்டது.

 
எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்
 
 
 
 

கீழடி தொல்லியல் அகழ்வாய்வு


கீழடி தொல்லியல் அகழ்வாய்வு





 

   ஆகஸ்ட் 11, 2017  (11.08.2017) அன்று மாலை 4.30 மணிக்கு எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கூட்டப்பட்டது. மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழடி அகழ்வாய்வு குறித்த பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. அது தொடர்பான படங்களும் காட்டப்பட்டது.


 
இந்திய தொல்லியல் ஆய்வுகள்




 

    1920 களில் சிந்து வெளி அகழ்வாய்வுகள் மூலம் வடஇந்தியாவில் இருந்த நகர நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதாரோ, மெஹெர்கர் (பாகிஸ்தான்), லோத்தல், தோலவீரா (குஜராத்), களிபங்கன் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில்  நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் இவை உறுதி செய்யப்பட்டன.




   தமிழகத்திலும் சில இடங்களில்  அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், புதுச்சேரிக்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவில் அரிக்கமேடு, பூம்புகார் (கடலடி ஆய்வுகள்) ஆகிய இடங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.




   இவற்றில் ஹரப்பா போன்ற பெரிய நகர நாகரிகத்தின் சுவடுகள் போலன்றி சிறிய ஆதாரங்களே கிடைத்துள்ளன. மத்திய. மாநில அரசுகளின் பாராமுகம், அரசியல் சார்புத் தன்மையின் விளைவாக இந்த ஆய்வுகள் தொடராமல் பாதியில் நிற்பது வேதனைக்குரியது.
 

  குமரிக்கண்டம் குறித்த தொன்மம் தமிழர்களிடம் நம்பிக்கையாக நிலை பெற்றுள்ளது இதை நிருபிக்க அல்லது மறுக்க பெரிய கடலடி அகழ்வாய்வுகள் தேவை. கீழடியில் நடந்த நிகழ்வுகள் அததகைய நம்பிக்கைகளை எதையும் நமக்குத் தருவதாக இல்லை.

 

கீழடி அகழ்வாய்வு
 

  மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ராமநாதபுரம்  அழகன்குளம் துறைமுகத்திற்குச் செல்லும் பண்டைய வணிகப்பாதையில் மணலூர் கண்மாய் அருகே பள்ளிச்சந்தைத் திடலில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது.
 



  இந்த அகழ்வாய்வு மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் நடத்தப்பட்டது.
 

  2013 லிருந்து தொடரும் இந்த ஆய்வுகள் வைகையாறு கடலில் கலக்கும் ராமநாதபுரம் தொடங்கி அதன் பாதையின் தேர்வு செய்யப்பட்ட 293 இடங்களில் முந்தைய ஆய்வுகள் நடைபெற்றன.

 

  2015 – 2016 இல் கீழடி தொல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் கிருஷ்ணகிரி அரசுக் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், கல்வெட்டு ஆய்வாளர் வேதாச்சலம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.



   இங்கு 48 குழிகள் தோண்டப்பட்டு 5000 க்கு மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் இரண்டு மட்டுமே கார்பன் காலக்கணிப்புக்கு (carbon dating) அனுப்பப்பட்டன. அவற்றின் மூலம் இவற்றில் காலம் கி.மு. 3 – கி.பி. 10 ஆம் நூற்றாண்டுகள் என அறியப்பட்டுள்ளது.
 

  இந்த ஆய்வை மேலும் தொடரவும் இதற்கென கூடுதல் நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதன் காரணம் மிக வெளிப்படையானது. கீழடியில் இப்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கவும் அதற்கென இடம் ஒதுக்கவும் தமிழக அரசு முடிந்த வரையில் காலம் தாழ்த்தியது. தமிழக பெரும் அரசியல் கட்சிகள் வழக்கம் போல இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
 

   சிறிய அமைப்புகள் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக குறிப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் எழுத்தாளர் சு.வெங்கடேசன்  ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரைக்குப் பின் சில காரியங்கள் நடந்தன. ‘விகடன் தடம்’ மாத இதழிலும் இவர் எழுதினார். இக்கட்டுரைகள் குறுநூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.  
 

    அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ. 151 கோடி நிதியும் புராணங்களில் சொல்லப்படும் இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க மத்திய அரசு பல்கோடிகளை வாரி இறைக்கிறது. கீழடியுடன் குஜராத்தில் தொடங்கப்பட்ட அகழ்வாய்வில் எவ்வித முன்னேற்றம் இல்லாத நிலையில் அதனைத் தொடர்வதற்கும் கீழடி அகழ்வாய்வை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்தது. கடும் எதிர்ப்பின் விளைவாக அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு ஏதோ பெயருக்கு ஆய்வைத் தொடர உத்தரவிட்டுள்ளனர். இம்மாதிரி ஆய்வுகளில் போதிய அனுபவம் இல்லாத ஒருவரை நியமித்ததன் மூலம் கீழடி மீண்டும் புதைக்கப்பட்டுவிட்டது.
 

    பொதுவாக இடுகாட்டில்தான் அதிக ஆய்வுகள் நடந்துள்ளது. இவற்றில் எலும்புகள் போன்றவை கிடைக்கும். ஹரப்பா போன்று மக்கள் வாழ்விடத்ப்தொகுதி இங்கு கிடைத்திருப்பது முக்கியமானது. இந்திய வரலாற்றாய்வில் இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கக் கூடிய இப்பகுதிகளில்  ஆய்வுகள் நடத்துவதன் மூலமே பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
 

   இங்கு கிடைத்திருப்பவை:

  • உறைகிணறுகள்
  • செங்கற்சுவர்கள்
  • அணிகலன்கள்
  • கூரை ஓடுகள்
  • மட்பாணடங்கள்
  • மிளிர்கல்
  • எலும்புக் கருவிகள்
  • இரும்புக் கருவிகள்
  • தமிழி எழுத்துகள் பொறித்த பானையோடு
  • விலங்கின் காலடித்தடம் பட்ட செங்கல்
  • பளிங்குகள்
  • பச்சை, மஞ்சள் நிற மணிகள்
  • யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள்
  • தாமிர மைதீட்டும் கம்பி
  • எழுத்தாணி
  • சுடுமண் முத்திரைகள்
  • சுடுமண் பொம்மைகள்
  • தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள்

 

 

எழுத்தாக்கம்:

மு.சிவகுருநாதன்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேமிப்பு


நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேமிப்பு


      28.07.2017 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற நம் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தகவல்கள் பேசப்பட்டன.


   நாணயவியல்   (Numismatics) என்பது நாணயம் மற்றும் அவை சார்ந்த வரலாறு தொடர்பான அறிவியல்துறையாகும். நாணயச் சேகரிப்பு மட்டுமல்லாது பண்டமாற்றம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பற்றியது இத்துறையாகும்.


  நாணயங்கள் சேகரிப்பு என்பது  ஒரு சிறந்த பொழுதுபோக்குப் பணி; கூடவே இவற்றிற்கான மதிப்பு மிக அதிகம். வட்ட, மாவட்ட, மாநில, இந்திய, உலக அளவில் உள்ள அமைப்புகள் மூலம் நாணய சேகரிப்பாளர்கள் சமூகமாக இணைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பரந்த தொடர்பு கிடைப்பது கூடுதல் பலன்.


  இது மாணவர்களுக்கு வரலாறு கற்றலுடன் இணைந்த ஒரு இன்பமூட்டும் அனுபவமாகும். எனவே பழங்கால நாணயங்கள் கிடைக்காவிட்டாலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள், பயன்பாட்டில் இல்லாத செல்லாத நாணயங்கள், அயல்நாட்டு நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கலாம்.


   இதனுடன் கூடவே இந்திய, பன்னாட்டு அஞ்சல் தலைகள் சேகரிப்பும் எடுத்துக் கூறப்பட்டது. நாணயங்கள், அஞ்சல் தலை சேகரிப்புக்கு மாதிரிகள் காட்டப்பட்டன.


எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்

முதுமரங்களைத் தேடி…


முதுமரங்களைத் தேடி…





 

    திரு நக்கீரன் அவர்களின் ‘காடோடி’ நாவலில் வரும் மூதாய் மரத்தைப் போன்ற தொன்மையான மரங்கள் உள்ளூரில் எங்கு இருக்கிறது என்று விசாரித்து, கூடவே இரு மாணவர்களின் துணையோடு ஒரு மூது மரத்தைத்தேடி அகரத்திருநல்லூர் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள சுடுகாட்டில்  ஒரு முதுமரத்தைக் கண்டு மகிழ்ந்து, படமெடுத்துத் திரும்பினோம்.


    என்னுடன் வந்த குபேஷ் என்னும் மாணவர் தனது அய்யா (தாத்தா) காலத்திருந்து இந்த மரம் இருக்கிறது என்பதை தாத்தா மூலம் அறிந்திருந்தார். பலமுறை இந்த முதுமரத்தை வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார். இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
 




   மேலும் தொன்மை என்பது வெறும் பழங்கால கட்டிடங்கள் மட்டுமல்ல. மனிதர்கள், மண், மலைகள், காடுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் ஆகியன தொன்மையானதுதான் என்று சொன்னபோது, ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் “நமது மொழியும் தொன்மையானது”, என்றார். தொன்மை என்பது மாணவர்களுக்கு எளிதில் விளங்கிவிட்டது.
 



 எழுத்தாக்கம்:

மு.சிவகுருநாதன்

கூட்டு உடற்பயிற்சி


கூட்டு  உடற்பயிற்சி

 

   எம்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் திரு க.ஸ்டாலின் அவர்கள் 18.08.2017 வெள்ளியன்று மாணவர்களின் கூட்டு உடற்பயிற்சியை நடத்தினார். மாடியிலிருந்து எடுக்கப் பட்ட சில காட்சிப் படங்கள்.










கருத்துரிமைப் பெட்டி


கருத்துரிமைப் பெட்டி






             சமூக அறிவியல் மற்றும் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ஜூலை 10, 2017 (10.07.2017)  அன்று  காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் கருத்துரிமைப் பெட்டி வைக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது கருத்துகள் மற்றும் குறைகளைப் பதிவு செய்து பெட்டியில் இட்டனர். அவைகள் தொகுக்கப்பட்டுத் தலைமையாசிரியர் பார்வைக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள் பதிவு செய்தவற்றுள் ஒரு சில மட்டும்.



  • கழிவறை வசதி
  • தூய்மையான குடிநீர்
  • சுகாதாரமான சத்துணவுக் கூடம்
  • பள்ளி வளாகத் தூய்மை
  • வகுப்பறைத் தரைகள் சீரமைப்பு
  • பள்ளி வளாகச் சுற்றுச்சுவர்
  • 9 ஆம் வகுப்பு அ பிரிவுக்கு மின்விசிறி வசதி
  • விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • ஆண்டு விழா நடத்துதல்
  • போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்குதல்
 
எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஜூன் மாத செயல்பாட்டு அறிக்கை:


தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club)
 
ஜூன் மாத அறிக்கை (2017)
 
 
 
அரசு மேல்நிலைப் பள்ளி
 
காட்டூர் – 610104
 
திருவாரூர் மாவட்டம்
 



எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club) மன்ற ஜூன் மாத செயல்பாட்டு அறிக்கை:
 


 


யுனெஸ்கோ நிறுவனத்தின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அறிந்துகொள்ளுதல்:
 
யுனஸ்கோவின் நோக்கங்கள்:
 
  • கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையாடல்களை மேம்படுத்துதல்.
  • சமாதானத்தை ஏற்படுத்துதல்,
  • வறுமையைக் குறைத்தல்
  • தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்
 
 
 
இந்திய பாரம்பரியச் சின்னங்கள்
 
  • ஆக்ரா கோட்டை (1983), உத்தரப்பிரதேசம
  • அஜந்தா குகைகள் (1983), மகாராஷ்டிரா
  • சாஞ்சியிலுள்ள பவுத்த நினைவுச்சின்னங்கள், மத்தியப்பிரதேசம்
  • சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத்
  • சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்), மகாராஷ்டிரம்
  • கோவாவின் தேவாலயங்களும் மடங்களும், வெல்ஹா,கோவா (பழைய கோவா), கோவா
  • எலிபண்டா குகைகள், மகாராஷ்டிரா
  • எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா
  • ஃபதேப்பூர் சிக்ரி, உத்தரப்பிரதேசம்
  • அழியாத சோழர் பெருங்கோயில்கள், தமிழ்நாடு
  • ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா
  • மாமல்லபுர மரபுச்சின்னங்கள், மகாபலிபுரம்,தமிழ்நாடு
  • பட்டடக்கலிலுள்ள நினைவுசின்னங்கள், பட்டடக்கல், கர்நாடகா
  • ஹூமாயூனின் சமாதி, தில்லி
  • ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்), ஜெய்ப்பூர்,இராஜஸ்தான்
  • காசிரங்கா தேசியப் பூங்கா, அசாம்
  • கேவலாதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், இராஜஸ்தான்
  • கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள், மத்தியப் பிரதேசம்
  • மகாபோதி கோயில், புத்த கயா, பீகார்
  • மானசு வனவிலங்கு காப்பகம், அசாம்
  • இந்திய மலைப்பாதை தொடருந்துகள்: டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா
  • நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, சமோலி மாவட்டம், உத்தராஞ்சல்
  • குதுப் மினார் வளாகம், தில்லி
  • செங்கோட்டை வளாகம், தில்லி
  • பீம்பேட்கா பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசம்
  • சுந்தர வனத் தேசியப் பூங்கா, மேற்கு வங்காளம்
  • கொனார்க் சூரியன் கோயில், பூரி மாவட்டம், ஒடிசா
  • ராணியின் குளம், பதான் மாவட்டம், குஜராத்
  • தாஜ் மகால், ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
  • மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012) : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்
  • நாளந்தா பல்கலைக்கழகம்(2016), பீகார்
  • அகமதாபாத் நகரம்(2017) , அகமதாபாத், குஜராத்
 
 


மாமல்லபுர மரபுக்கோயில்கள் (1984)
 
 


யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை.

  • மாமல்லபுரம் ரதக் கோயில்கள் குகைக்கோயில்கள் (அ) மண்டபங்கள்,  வராக குகைக்கோயில், கிருஷ்ண குகைக்கோயில்
  • மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம் மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
  • அர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.
  •  மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (சிவன் கோயில்)
 
 


அழியாத சோழர் பெருங்கோயில்கள் (1987)
 
  • தஞ்சாவூர்   பிரகதீஸ்வரர் கோவில்
  • கங்கைகொண்ட சோழபுரம் 
  •  தாராசுரம்   ஐராவதேஸ்வரர் கோயில்
 
 
நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து (1995)
 
 
  • சிம்லா மலைப்பாதை
  • டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே
  • மாதேரன் மலைப்பாதை
 
    உதகமண்டலத்திற்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை (rack railway) ஆகும். (பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்)
 
 
 
 
  • இத்தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.  
  • மாணவர்களுக்கு அஞ்சல்தலைகள், நாணயங்கள் சேகரிக்கும் செயல்பாடுகள் அளிக்கப்பட்டன.
  • உங்கள் ஊரில் உள்ள குளங்கள், ஆறுகள், பெரிய முது மரங்கள் பற்றிய விவரங்களை எழுதிவரச் செய்தல்.
 
 
 
 
 
பொறுப்பாசிரியர்                                        தலைமையாசிரியர்
 
(மு.சிவகுருநாதன்)                                             (சீ.பத்மாவதி)