வியாழன், 21 செப்டம்பர், 2017

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) 2017


தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) 2017
 

மு.சிவகுருநாதன்
 

     தேசிய திறனாய்வுத் தேர்வு (National Talent Search Examination) என்பது 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.500 கிடைக்கும். அம்மாணவனுக்கு முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) வரைக்கும் வரை இந்த உதவித்தொகை உண்டு.
 

    இந்த தேர்வை 10 -ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே மட்டுமே எழுத முடியும். 9 -ம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10 -ம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் வினாக்கள் இருக்கும்.    முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் (CBSE syllabus) நடத்தப்படும்.  ஒருவகையில் இதுவும் நீட் தேர்வு போலத்தான்!
 

   தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசியத் தேர்வில் தரப்பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்கலாம்.
 

    இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள் மட்டுமே. குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் கூடுதல் இடம் கிடைக்கும். எப்போதாவது தமிழகத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் யாரும் தேர்வாகவில்லை.
 

   இத்தேர்வில் தேர்வாகும்  மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக் கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கலாம் என்பது இந்தத் தேர்வின் கூடுதல் பலன்.
 

  இத்தேர்வை எழுத வருமான உச்சவரம்பு இல்லை. அனைவரும் எழுதலாம். மாநில அளவிலான தேர்வு இரண்டாக உள்ளது.  
 

SAT (Scholastic Aptitude Test)

   (9, 10 பாடங்களில் இருந்து வினாக்கள்)

MAT (Mental Aptitude Test)

(மனத்திறன் தேர்வு)

 

   இத்தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 5 மாணவிகள் சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின்  பெயர்கள் பின்வருமாறு:
 

  • சந்தியா    
  • அபிதா     
  • காவியா  
  • சஷ்டிதா   கோ
  • லெட்சுமி   
 

   தேர்வுக்கட்டணம் ரூ.50. இத்தேர்வு நவம்பர் 05 (05.11.2017) ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
 

   இம்மாணவர்களுக்கு சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் வினாத்தாள்கள் கொண்டு பள்ளியிலேயே சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக