திங்கள், 27 நவம்பர், 2017

மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்




மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்




அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் – 610104, திருவாரூர் – மாவட்டம்.

 
  1. 2017 – 2018 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் மெல்லக் கற்போர் 6 பேர் இனங்காணப் பட்டனர்.
  2. இவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (RMSA) மெல்லக் கற்போருக்குக்கான (SLAP) கையேடுகள் வழங்கப்பட்டன.
  3. இவர்களில் ஒருவரைத் தவிர எஞ்சிய ஐவரும் மதிய உணவிற்கு வீடுகளுக்குச் செல்கின்றனர்.
  4. இந்த ஐவரும் மதிய உணவு எடுத்துவர அல்லது சத்துணவு சாப்பிட கேட்டுக் கொள்ளப் பட்டது.
  5. மதிய உணவு இடைவேளையில் சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கி அதில் சமூக அறிவியல் கட்டங்களிலிருந்து சில பகுதிகளை தினமும் படிக்க, எழுத ஆலோசனை வழங்கப் பட்டது.
  6. இந்த 6 பேருக்கும் படிப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்க அவர்களது விருப்பத்தின் பேரில் நன்றாக படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
  7. எழுத, படிக்க வாய்ப்புள்ள உரிய தருணங்களில் குழுக் கற்றல்.
  8. இவர்களது வருகைப் பதிவு குறைவாக உள்ளது. தினசரி வருகைப்பதிவையும் சிறப்பு வகுப்பில் பங்கேற்பதையும் உறுதி செய்தல். 
  9. வெள்ளி காலை, மாலை சமூக அறிவியல் சிறப்பு வகுப்புகளில் இவர்களுக்குத் தனிக்கவனம்.
  10. ஆசிரியர் இல்லாத பதிலிப் பாடவேளைகள் மற்றும் விடுமுறை நாள்களில் இவர்களது விருப்பத்தையொட்டி சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சியளித்தல்
     
மு.சிவகுருநாதன், சமூக அறிவியல் பாட ஆசிரியர்
அ.மே.நி.ப., காட்டூர் – 610104.
 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு


(National Means cum Merit Scholarship)


மு.சிவகுருநாதன்


     மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. கல்வி உதவித் தொகைக்கான இந்த்தத்  தேர்வு, எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது.  அரசு பள்ளிகள், ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத முடியும். சுயநிதி தனியார் பள்ளி மாணவர்கள் இத்தேர்வை எழுத முடியாது.  குடும்பத்தின்  ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 7 -ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும்  எடுத்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மாணவர்கள் எனில் 50% போதுமானது.




  குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில்  6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் +2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படுகிறது.


    தேர்வுக்கான பாடத்திட்டம் ஏழாம் வகுப்பு முழுப் பாடத்திட்டமும், எட்டாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வு வரையிலான பாடத்திட்டமும் இருக்கும். தமிழக அரசு நடத்தும் இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 6,695 பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடிய இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.


   இத்தேர்வை எழுத காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் கீழ்க்கண்ட 5 பேர் சார்பிலான விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.


அவர்கள் பின்வருமாறு:


கீர்த்தனா   பா

சுபிதா     

பௌவித்ரா    கா

ரோஜா தஸ்லீம்   

ஹரிதாசன்   


    இம்மாணவர்களுக்கு பள்ளி இடைவேளை மற்றும் காலை, மாலை வேளைகளில் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


    தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தம் தரக்கூடியது. உடனடியாக மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி இத்தொகையை மாணவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட ஆவண செய்திடவேண்டும்.

புதன், 8 நவம்பர், 2017

நவம்பர் 14 – குழந்தைகள் நாள்: ஒரு வேண்டுகோள்


நவம்பர் 14 – குழந்தைகள் நாள்: ஒரு வேண்டுகோள்

 

மு.சிவகுருநாதன்


     ஆசிரியர் தினம் கொண்டாடும் பள்ளிகள் பல குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதில்லை. கல்வியும் பள்ளிகளும் குழந்தைகளுக்கானதாக இல்லை. குழந்தைகள் இவைகளிடமிருந்து அந்நியப்பட்டே உள்ளனர். கல்வியின் அனைத்து தளங்களையும் குழந்தைகளுக்கானதாக மாற்ற இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


      திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் 300 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இதில் 100 பேர் மேனிலை மாணவர்கள். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் 200 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் குழந்தைகளே இங்கு கல்வி கற்கின்றனர்.


   இப்பள்ளிகளுக்கான தேவைப் பட்டியல் அளவில்லாதது. அவற்றில் சில.


  1. பள்ளி வளாகச் சுற்றுச்சுவர்.
  2. குடிநீர் வசதி.
  3. தண்ணீருடன் கூடிய கழிவறை வசதி.
  4. சமூக விரோதிகளிடமிருந்து பள்ளியைப் பாதுகாக்க இரவுக் காவலர் பணியிடம்.
  5. புதிய, தூய்மையான சத்துணவுக் கூடம்.
  6. கூடுதல் கட்டிடங்கள்.
  7. உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஆஸ்பெட்டாஸ் கூரை இல்லாத வகுப்பறைகள்.
  8. சிதைலமடைந்த கட்டடங்கள் இடிக்கப் பட்டு வளாகம் தூய்மைப்படுத்தப் படுதல்.
  9. இரண்டு முன்னாள் தமிழக முதல்வர்கள் திரு சி.என்.அண்ணாதுரை, திரு மு.கருணாநிதி ஆகியோர் தொடர்புடைய கட்டடம் ஒன்றைத்தவிர எஞ்சிய  பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எடுத்தல்.
  10. மேனிலையில் கணினிப் பிரிவுகள். நிரந்தர ஆசிரியர் பணியிடம். 
  11. மேனிலையில் வரலாறு, பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள், அதற்குரிய ஆசிரியர் பணியிடங்கள்.
  12. ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகம்.
  13. மாணவர்களுக்கு கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம்.
  14. புதிய கட்டட இடிபாடுகள் மற்றும் பழுதுகளைச் சீரமைத்தல்.
  15. பள்ளி நூலகத்திற்கு நல்ல நூல்கள், தனி நூலக அறை வசதி.

 

     என நீளும் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. இவற்றில் பல கருத்துரிமைப் பெட்டியின் வாயிலாக மாணவர்கள் வெளிப்படுத்திய கோரிக்கைகள். இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசால் மட்டுமே முடியும். ஏனெனில் அதிகம் செலவாகக் கூடியத் திட்டங்கள் இவை.


       1998, 2008 ஆகிய ஆண்டுகளில் திரு மு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது முறையே உயர்நிலை, மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. நபார்டு கடனுதவியின் கீழ் சுமார் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் 9 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் 2016 இல் கட்டப்பட்டுள்ளன. அதற்குரிய இடத்தை தி.மு.க. வினர், முரசொலி அறக்கட்டளை, உள்ளூர் மக்களுடன் இணைந்து வாங்கித் தந்துள்ளனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் மாடியில் இரு வகுப்பறைக் கட்டடமும் ரூ. 6.75 லட்சத்தில் கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் உள்ளன. இவற்றை நல்ல முறையில் பாதுகாத்து, பராமரிக்க மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பாரின் ஆதரவு தேவைப்படுகிறது.


   பள்ளி நூலகத்திற்கு நல்ல நூல்கள் தேவை. இருக்கின்ற   நூல்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) கீழ் வாங்கப்பட்ட நூல்கள் குழந்தைகளுக்கானதாகவும், தரமானதாகவும் இல்லை என்பது மிகவும் வருந்தற்குரியது.


   பள்ளி மாணவர்களின் குடும்பச் சூழல் நல்ல நூல்களை, நாளிதழ்களை வாங்கிப் படிக்கும் அளவில் இல்லை. மாணவர்களுக்கு நல்ல நூல்களைப் பரிசளிப்பதும், நூலகத்திற்கு நல்ல நூல்களை வழங்குவதும் மிகவும் இன்றியமையாத, நம்மால் இயலும் பணியாக உள்ளது.


   சென்ற மாதம் இப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை திருமதி உல.சுமதி அவர்கள் தனது சேமிப்பில் இருந்த நூல்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார். அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.


   நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் (சென்னை) 50% கழிவில் குழந்தைகளுக்காக பல நல்ல நூல்களை விற்பனை செய்கிறது.


   குறைந்த பட்சம் ரூ. 2000 க்கு வாங்கினால் இந்தக் கழிவு கிடைக்கிறது. ரூ. 2000 க்கு ரூ. 4000 மதிப்பிலான நூல்களை வாங்க முடியும். இன்னும் சில நாள்களே இருப்பதால் உடனடியாக செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தருணத்தில் இயலாதபட்சத்தில் ஏப்ரல் 23 உலக புத்தக நாளுக்கும் இதேபோல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


   பள்ளி நூலகத்திற்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கவும் நூல்களை அன்பளிப்பாக வழங்க முன்வருமாறு இதன்மூலம் வேண்டுகின்றோம். இது குறித்து தங்களது  கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்.